தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 76

#history #Article #today
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 76

சோழர் வரலாறு - பிற சோழ அரசர்

முன்னுரை:

புறநானூற்றுப் பாடல்களில் சோழ மரபினர் பலர் குறிக்கப் பெற்றுளர். அவர்களைப் பற்றி ஒன்று முதல் நான்கு, ஐந்து பாடல்கள் அந்நூலுட் காண்கின்றன. சிலர் பேரரசராகவும் பலர் சிற்றரசராகவும் இருந்திருத்தல் கூடியதே ஆகும். இவர் தம் குறிப்புகள் அனைத்தும் இப்பகுதியிற் காண்க.

1. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

முன்னுரை:

இவன் பெயரைக்கான, இவன் பேரரசனாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இராயசூய வேள்வி செய்பவன் பேரரசனாக இருத்தல் வேண்டும். எனவே, இவன் பல நாடுகளை வென்று அடக்கியவனாதல் வேண்டும் என்பதுதானே போதரும், புறம் 16-ஆம் செய்யுள் இவனது போர்த் திறத்தைப் பாராட்டியுள்ளது. அதனைப் பாடியவர் பாண்டரங்கண்ணனார் என்பவர். இவனைப் பற்றிய பாடல்கள் கிடைக்காமை வருந்தற்குரியதே.

போர்ச் செயல்கள்: “

இவன் எல்லை இல்லாத படையினையும் துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் உடையவன்; புலால் நாறும் வாளினையும் பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன்; பகைவரது நெல்விளை கழனியைக் கொள்ளையூட்டி காவற் பொய்கைகளிற் களிறுகளைப் படிவித்து நாடு முழுவதும் செந்நிறமாகச் செய்த பெருவீரன். இவன் எண்ணப்படியே இவனுடைய களிறுகள் போர் செய்ய வல்லன.”[1] இங்ஙனம் இவன் போர் செய்த இடங்கள் எவை என்பது விளங்கவில்லை.

சேரனுடன் போர்: இப்பேரரசன் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவனுடன் போர் செய்தவன். அப்போரில் இவனுக்கு உதவி செய்தவன் திருக்கோவிலுரை ஆண்ட மலையமான் ஆவன். அவனைப் பாட்டி வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் பாடியுள்ளார்; “மலையன் இல்லாவிடில் நாம் வெல்லுதல் அரிதென்று சோழனும் நின்னைப் புகழ்கின்றான்; மலையன் இல்லாவிடில் நாம் தோற்பதரிது’ என்றுசேரனும் நின்னைப் பாராட்டுகின்றான். வள்ளன்மையிற் சிறந்த பெரியோனே, நண்பரும் பகைவரும் பாராட்டத்தக்க நினது வீரம் புகழ்தற்குரியதே ஆகும்”[2]

சேர பாண்டியர்க்கு நண்பன்: இப்பெருநற்கிள்ளி தன் காலத்துச் சேர பாண்டிய மன்னர்க்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இவன் காலத்துச் சேரப் பேரரசன் மாரி வெண்கோஎன்பவன்; பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்பவன். இவ்விருவரும் சோழனுடன் சில நாள் அளவளாவித் தங்கி இருந்தனர். அவ்வமயம் ஒளவையார்இம்மூவரையும் பாராட்டிப் பாடியுள்ளார்;

“தேவலோகத்தை ஒத்த சிறப்புடைய நாடாயினும் அது நம்முடன் வருதல் இல்லை; அது தவஞ் செய்தோர்க்கே உரியதாகும்; என்றும், இரந்த பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பல ஊர்களைத் தானமளித்தீர்; பசிய இழைகளை அணிந்த மகளிர் பொற்கிண்ணங்களில் ஏந்திய தேனை உண்டு மகிழ்ந்தீர், இரவலர்க்குப் பல நகைகளை அளித்தீர்;[3 இநத நல்வினையே நும்மை வாழச் செய்யும். நீவிர் மூவரும் விண்மீன்களிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்வீராக![4]

சிறந்த வள்ளல்: இவனது வள்ளன்மையை உலோச்சனார் என்ற புலவர் அழகாக விளக்கியுள்ளார்: “மலை பயந்த மணியும் காடு பயந்த பொன்னும் கடல் பயந்த கதிர் முத்தமும் வேறுபட்ட உடையும் மதுக்குடமும் கனவிற் கண்டாற் போல (மிகுதியாக) வழங்குகின்ற வள்ளலே, நின் கொற்றம் வாழ்வதாக!”[5]

புரவலன்:

இப்பெருந்தகை ஒளவையார், பாண்டரங் கண்ணனார், உலோச்சனார் என்ற பைந்தமிழ்ப் புலவரை ஆதரித்தவன் என்பது இப்பாக்களால் நன்கு தெரிகிறது. இவன் வரையாது வழங்கிய பெருவள்ளல் என்பதும், பார்ப்பார்க்குப் பிரம்மதேயங்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் என்பதும், அவர்கள் துணைகொண்டு இராயசூயம் செய்து புகழ்பெற்றவன் என்பதும் விளங்குகின்றன.

2. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி[6]

முன்னுரை: இவன் தித்தன் என்ற சோழனது மகன்; தந்தையுடன் வேறுபட்டு நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக் கூழை உண்டிருந்தவன், முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றவன் இவனைப் பாடியவர் சாத்தந்தையார் (சாத்தன் தந்தையார்?)[7] பெருங்கோழி நாய்கன் மகள் தக்கண்ணையார்[8] என்போராவர்.

போர்:

இவனது ஊரைக் கொள்ள ஆவூர் மல்லன் வந்தனன் போலும்! அவனுடன் இவன் விரைந்து போர் செய்தான். அப்போர் பொழுது போன பிறகு கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[9]

நக்கண்ணையார் காதல்: இவர் புலவர் பெண்மணி ஆவர்; பெருங்கோழி (உறையூர்?) நாய்கன் மகளாவர். இவர் கிள்ளிமீது காதல் கொண்டவர்போலப் பாராட்டும் பாக்கள் நயமுடையன;

"வீரக் கழலையும் மைபோன்ற மீசையையும் உடைய இளையோன் பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுகிறது. அவனைத் தழுவ உள்ளம் உந்துகிறது. ஆயின், யாய்க்கும் அவையோர்க்கும் அஞ்சுகிறேன்.[10] என் சோழன் உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையைப் போல பகைவர்க்குக் காணப்படுவன். அவன் போரிற் சிறந்தவன்.[11] என் தலைவன் சிறந்த வெற்றி கண்டவன் என்று எல்லாரும் புகழ்தலைக் கேட்டு யான் மகிழ்கின்றேன். என் உள்ளம் கவர்ந்த ஆண்மையுடைய வளவன் வாழ்வானாக!”[12]