இன்றைய வேத வசனம் 01.10.2022: பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 01.10.2022: பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்

குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செய்யக்கூடாதவை.

பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதே பெற்றோரின் ஆசையாக இருக்கும்.
குழந்தைகளின் முன்னால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும், அவர்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிப் பார்ப்போம்.

1. கோபம், சண்டை வேண்டாம்.
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டால் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம், பயம், பதற்றம் போன்றவை உருவாகும்.

2. அவர்களுக்காக பேசுவது!
குழந்தைகளிடம் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோரே பதில் கூறும் போது, குழந்தைகள் சகஜமாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. இந்த செயல் அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் கூச்ச சுபாவத்தை அதிகரிக்கும்.

3. கேட்பதற்கு முன்பே வாங்கித்தருவது!
எதையும் குழந்தைகள் கேட்பதற்கு முன்பே வாங்கி தருவது பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறாகும். இதன் மூலம் அவர்களின் கேட்டு வாங்கும் திறனை குறைந்து விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு எது தேவை என்பதை உணரும் முன்பே பெறுவதால், எல்லாமே எப்போதும் கிடைக்கும் என்ற மனநிலை உருவாகிறது.

4. எல்லாமே கிடைப்பது!
குழந்தைகள் ஒரு பொருளை கேட்டவுடன், அந்த பொருள் அவர்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதைப் பற்றி எந்த ஆலோசனையும் செய்யாமல் உடனே வாங்கித் தருவது தவறானதாகும். அதன் தேவை என்ன? எவ்வளவு நாள் பயன்படுத்துவார்கள்? போன்ற விஷயங்களை குழந்தையுடன் விவாதிக்க வேண்டும். இது அவர்களின் நிதி மேலாண்மையும், பேச்சுத் திறனையும் வளர்க்க உதவும்!

5. நேரம் ஒதுக்குதல்.
இன்றைய சூழலில் பல வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரம் குறைவாக இருக்கிறது. வேலை நாட்களில் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், விடுமுறை நாட்களிலாவது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதனால் அவர்கள் தவறான வழிகளில் செல்வதை தவிர்க்க முடியும்!

6. அந்தரங்க பகிர்வுகள் கூடாது!
குழந்தைகள் முன் கெட்ட வார்த்தைகள் மட்டுமல்ல, அவர்களுக்கும் ஒன்றும் தெரியாது என்று எண்ணி ஜாடையாக கூட அந்தரங்கங்களை பேசக்கூடாது. பிறர் பற்றிய அவதூறுகளையும் பேசக்கூடாது.

7. பொய் சொல்லக்கூடாது!
குழந்தைகள் முன் பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு சூழலில் குழந்தைகள் முன்னிலையில் பொய் சொல்லி சமாளிக்கும் போதும் அவர்கள் கவனிக்கிறார்கள். இதன் மூலம் பொய் சொல்வது இயல்பானது என்கிற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

8. வாக்குத் தவறக்கூடாது!
குழந்தைகள் நம் வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே அவர்களிடம் நாம் கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குகளைக் கொடுக்கக்கூடாது. வாக்குறுதியைத் தவற விடும் பெற்றோரிடம் குழந்தைகளின் நம்பிக்கையும் குறையும்.

9. தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!
குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலோ, தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலோ அவர்களை திட்டாமல் அவர்கள் பிரச்சனை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

10. தீய காரியங்களை தவிர்க்க வேண்டும்!
மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது. இதெல்லாம் பின்னர் அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை பெற்றோர்கள் மறக்க கூடாது.

தேவன் தந்த பிள்ளைகளை சமுதாயத்தில் தேவனுக்கு பயந்து நடக்கிற சந்ததியாக உருவாக்குவது நமது தலையாய கடமையாக இருக்கிறது. நம் கடமையை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுவோம் ஆமென்!

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதிமொழிகள் 22:6 )