கிளிநொச்சி மாவட்டத்தில் 9,971 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு!

Mayoorikka
1 year ago
கிளிநொச்சி மாவட்டத்தில் 9,971 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தியொரு குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளளார். 

கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது . 

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதே நேரம் 576 வரையான ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வறுமையினால் பாதிக்கப்பட்ட 784 கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து துறையினரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் உணவு உற்பத்திகளை ஊக்கப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சகல துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.