நோயாளியுடன் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் வண்டி

Kanimoli
1 year ago
நோயாளியுடன் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் வண்டி

  யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்ட நிலையில் காற்றுபோய் இடைநடுவில் ஆம்புலன்ஸ் நின்றுள்ளது.

உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்பட்ட நோயாளர் காவு வண்டி யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் பயணித்த போது, மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நடு வீதியில் காற்று போய் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குறித்த சம்பவத்தினை செய்தியாக்கும் நோக்குடன் ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளரை , நோயாளர் காவு வண்டி சாரதி மற்றும் நோயாளர் காவு வண்டியில் வந்திருந்த வைத்தியர் மிரட்டி, தாக்க முற்பட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நோயாளர் காவு வண்டியின் சில்லுகள், டயர்கள் தேய்வடைந்த நிலையில் காணப்படுவதே காற்று போவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

அதனை செய்தியாக்கினால் நோயாளர் காவு வண்டி உரிய பராமரிப்பு இன்றி காணப்படும் விடயம் வெளி வரும் என்பதனாலேயே தன்னை சாரதியும் , வைத்தியரும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.