ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் எந்த பிரச்சனையும் இல்லை :ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம்

Prathees
1 year ago
ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் எந்த பிரச்சனையும் இல்லை :ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம்

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்த ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கத்தின் இந்தியா மற்றும் நேபாள ஊடக பிரதிநிதிகள் குழு, இலங்கையின் சுற்றுலாத்துறையை விரைவாக மீட்டெடுப்பதற்கு தமது ஊடகங்கள் ஊடாக பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், குறுகிய காலத்தில் பொருளாதாரச் சவால்களில் இருந்து விரைவாக மீள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமருக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட இலங்கைக்கு உடனடியாக பொருள் மற்றும் நிதி மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக இந்தியாவிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.

 தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கி வருவதாகவும், இலங்கையின் பல வருட பாரம்பரியமான பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் எப்போதும் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு வருவதைத் தவிர்ப்பதற்கான சமூக ஊடகப் பிரச்சாரங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் எந்தப் பகுதிக்கும் முழுமையான இயல்புநிலை மற்றும் தொந்தரவுகள் இன்றி பயணிக்க முடிந்தமை ஆச்சரியமளிப்பதாக இந்திய மற்றும் நேபாள ஊடகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கை தொடர்பான தவறான தகவல்களை ஊடகங்களில் இருந்து அகற்றி, இலங்கையை அடுத்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே தமது முதல் பணியாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிய ஊடகம் மற்றும் கலாச்சார சங்கம் மற்றும் அதே சங்கம் சார்பில் கல்யாண் குமார், சத்ய நாராயண், சம்ஜனா புடல், அன்புஜ் மகேஸ்வரி ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.