பிரதமரின் உடன்பாட்டுடன் ஜனாதிபதிக்கு மேலும் 4 அமைச்சுக்கள்

Prathees
1 year ago
பிரதமரின் உடன்பாட்டுடன் ஜனாதிபதிக்கு மேலும் 4 அமைச்சுக்கள்

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கீழ் உள்ள 04 அமைச்சுக்களின் அலுவல்களை தொடர்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 (3) சரத்தின் கீழ், பிரதமருடன் கலந்தாலோசித்ததன் பின்னர், 04 அமைச்சுக்கள் தனது பொறுப்பில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்து, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை, தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய நான்கு அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கீழ் இயங்குவதற்கு மேலும் அதிகாரம் பெற்றுள்ளன.

21வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பாதுகாப்பு அமைச்சைத் தவிர வேறு அமைச்சுகளை வைத்திருப்பதற்கு ஜனாதிபதி பிரதமருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

இதன்படி கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி பிரதமரிடம் எழுத்துமூலம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நவம்பர் 4ஆம் திகதி அரசியலமைப்பின் 44(3) உப சரத்தின் பிரகாரம் பிரதமர் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதனையடுத்து ஜனாதிபதி செயலாளரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.