இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற ரூ. 40 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அரியமான் கடற்கரை கடலோரப் பகுதி வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை க்யூ பிரிவு (Q Branch) போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக மருந்துப் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில், போலீஸார் அரியமான் கடற்கரைத் தோப்புப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது, அங்குள்ள தோப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 அட்டைப் பெட்டிகளை போலீஸார் மீட்டனர்.
அவற்றைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 96,000 வலி நிவாரணி மாத்திரைகள் (Painkiller Tablets) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த வலி நிவாரணி மாத்திரைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் கறுப்புச் சந்தை தேவையைக் குறிவைத்து, இந்தியாவில் இருந்து இவற்றை மொத்தமாக வாங்கி கடத்த முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் தப்பியோடிய கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே