பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா

Prabha Praneetha
2 years ago
பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெற்றுள்ள அதிகாரமானது மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

நியாயமான மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு தான் தொடர்ந்து ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் போராட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக மாற்றுவது மற்றும் நாட்டை மேலும் சீர்குலைக்கும் வன்முறையாளர்களின் ஊடுருவலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு உண்மையான நோக்கங்கள் இருந்தால், மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி நாட்டை ஸ்திரப்படுத்த ஒருமித்த சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன் மூலமே நாடாளுமன்றம் மக்களின் ஆணையை பிரதிபலிக்கும் என்றும், மாற்றங்கள் ஒரே இரவில் நடக்காது என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.