6 மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்

#Protest
Prasu
2 years ago
6 மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்களையும், விசைப் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப்படகையும், அதில் இருந்த அந்தோணி, அஜித் உள்ளிட்ட 6 மீனவர்களையும் கைது செய்து இலங்கை வவுனியா சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் நடந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களையும், விசைப்படகையும் விடுவிக்கக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது, இன்று (ஜூலை 24) ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி ராமேசுவரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. 

இதனால் ஒரு நாளைக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.